ஒளியற்ற உலகில் அசைந்தாடும் செங்கீரை:
ஒளியற்ற உலகில் அசைந்தாடும் செங்கீரை: ஒரு குழந்தையின் உடல் இயக்க வளர்ச்சி என்பது புறம் சார்ந்த பல்வேறு படிநிலைகளைக் கடந்து பெற்றோராலும் மற்றவர்களாலும் கொண்டாடப்படக்கூடிய ஒன்று. அக்குழந்தையின் அங்க அசைவுகளை ஸ்லாகித்து ஊக்குவிப்பதன் மூலம் இங்கு ஏற்றுக்கொள்ளல் என்பது வெளிப்படையாக நடைபெறுகிறது. அத்தகைய ஆரோக்கிய வளர்ச்சிக்கான முகவரி என்பது குழந்தையின் இரண்டாவது பருவமான செங்கீரை பருவத்தில் இருந்து கண்டறியப்படுகின்றது. பார்வையின்மையுடன் பிறந்த ஒரு குழந்தை இப்பருவத்தை எவ்வாறு எதிர்கொள்கின்றது என்பதைப் பற்றி சிந்தித்தல் கூட புறக்கணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அரவணைப்பும் புறக்கணிப்பும் இரு வேறு தராசுகளாக இருப்பினும், அக்குழந்தையின் அடிப்படைக் கற்றல் என்பது இப்பருவத்தில் இருந்து தான் தொடங்குகின்றது என்பது நிதர்சனம். பார்வை தவிர்த்து மற்ற புலன்களின் நுட்பமான ஆற்றலை அக்குழந்தை எவ்வாறு விவேகத்துடன் கையாண்டு, இச்சமுதாயத்தில் எதிர்நீச்சல் இடுவதற்கு தன்னை ஆயத்தப்படுத்திக் கொள்கின்றது என்பதைப் பற்றி இக்கட்டுறையில் காண்போம். ஐந்தாவது மாதத்தை துவக்கமாகக் கொண்ட செங்கீரைப் பருவமானத...